மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை,

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த நிலையில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், படத்துக்கு தடை இல்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டு வழக்கை தள்ளுபடி செய்த்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு ‘ஏஞ்சல்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான உதயநிதி ஸ்டாலின், அந்த திரைப்படத்தில் முழுவதும் நடித்துக் கொடுப்பதற்குள் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். மேலும் இது தனக்கு கடைசி படம் என்றும் அமைச்சரான பிறகு உதயநிதி தெரிவித்தார்.

இதையடுத்து ஓஎஸ்டி படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன், ஏஞ்சல் திரைப்படம் 80% சதவீதம் முடிந்துள்ளது, மீதமுள்ள 20% சதவீத பணியும் முடித்துக்கொடுக்குமாறு சென்னை ஐகோர்ட்டில் மாமன்னன் படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த 23-ம் தேதி நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் ஜூன் 28-க்குள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் பதில் விளக்கம் தருமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.