'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தில் எல்லாமே நன்றாக அமைந்தது -  நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேச்சு

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் வசூலை குவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ‘ஜிகர்தண்டா 2’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா,

வெற்றியை பகிர வேண்டிய நேரம் இது. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்த்தோம். ரசிப்புத் தன்மை தற்போது முன்பை விட மிகவும் அதிகமாகி உள்ளது. ஒரு நகைச்சுவை காட்சிக்கு கைத்தட்டல் வரலாம், ஆனால் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு வரும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. “நம்ம பேசக்கூடாது, நம்ம படம் பேசனும்” என்று கார்த்திக் சுப்பராஜ் சொல்வார். அதே மாதிரி இந்த படம் பேசுகிறது.

லாரன்ஸ் அவர்கள் எனது மிகப்பெரிய நண்பர், நல்ல மனிதர், நல்ல பெயரை அவர் சம்பாதித்திருக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்களின் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தில் எல்லாமே நன்றாக அமைந்தது. அனைவருக்கும் பிடித்த மாதிரி அமைந்திருக்கிறது. நல்ல கதையை இயக்குனர் திரையில் காட்டியிருக்கிறார் என்று பேசினார்.