விரூபாக்ஷா: சினிமா விமர்சனம்
நடிகர்: சாய்தரம் தேஜ் நடிகை: சம்யுக்தா  டைரக்ஷன்: கார்த்திக் வர்மா இசை: அஜனீஷ் லோக்நாத் ஒளிப்பதிவு : சம்ஹத் சைனுதீன்

கிராமத்தில் மர்மமான முறையில் குழந்தைகள் மடிகிறார்கள். அதற்கு காரணம் ஊருக்குள் புதிதாக குடியேறி மந்திர தந்திர ஆராய்ச்சிகள் செய்யும் கமல் காமராஜ்தான் என்று ஊர்மக்கள் கருதி அவரை மனைவியோடு சேர்த்து எரித்துக் கொல்கின்றனர். இறந்த தம்பதியரின் மகனை அனாதை ஆசிரமத்தில் சேர்க்கின்றனர்.

பல வருடங்கள் கடந்த பிறகு அந்த ஊரில் நடக்கும் திருவிழாவுக்காக வருகிறார் நாயகன் சாய்தரம் தேஜ். ஊர் தலைவரின் மகள் நாயகி சம்யுக்தா மீது காதல் மலர்கிறது. அப்போது ஒருவர் கோயில் கருவறைக்குள் ரத்தம் கக்கி இறந்து விடுகிறார். இதனால் கோயிலின் புனித தன்மையை காக்க எட்டு நாட்களுக்கு உள்ளூர் மக்கள் வெளியூர் செல்லவும், வெளியூர் மக்கள் உள்ளூர் வரவும் தடைபோடுகிறார் பூசாரி.

அதன்பிறகு சிலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். சம்யுக்தாவையும் ஊர் மக்களையும் ஆபத்து சூழ்கிறது. தொடர் மரணங்களுக்கு என்ன காரணம், சம்யுக்தாவை சாய்தரம் தேஜ்ஜால் காப்பாற்ற முடிந்ததா? என்பது மீதி கதை.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வந்துள்ள படம்.

சாய்தரம் தேஜுக்கு முக்கிய படம். ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் காட்சிகளில் இயல்பான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

சம்யுக்தா முதல் பாதியில் அப்பாவி பெண்ணாகவும், இரண்டாவது பாதியில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு நடிப்பு ராட்சசியாகவும் பிரமாதப்படுத்தி உள்ளார்.

ஊர் தலைவராக வரும் ராஜீவ் கனக்கலா, டாக்டராக வரும் பிரம்மாஜி, அகோரியாக வரும் அஜய், சுனில், பூசாரியாக வரும் சாய் சந்த், பைரவாவாக வரும் ரவிகிருஷ்ணா என அனைவரும் கச்சிதமாக நடித்து கேரக்டர்களின் மீதான ஆர்வத்தை தக்க வைத்துள்ளார்கள்.

கிளைமாக்சில் உருகி உருகி பேசும் காதல் வசனங்கள் நெருடல்.

திகில் கலந்த கதைக்கு அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை சிறப்பு.

ஒளிப்பதிவாளர் சம்ஹத் சைனுதீன், ஒவ்வொரு காட்சியையும் அழகாக படம்பிடித்துள்ளார்.

ரசிகர்களை முழுக்க திகிலில் ஆழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் கார்த்திக் வர்மா.