விருதுக்கான வேடங்களை விரும்பும் சாக்ஷி அகர்வால்

தமிழில் ரஜினிகாந்துடன் ‘காலா’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், சாக்ஷி அகர்வால்.

வளர்ந்து வரும் நடிகையான சாக்ஷி அகர்வால் அளித்துள்ள பேட்டியில், “ஓ.டி.டி., வெப் சீரிஸ் என சினிமாவில் பல புதுமைகள் வந்துவிட்டன. இது நல்லது தான். இதனால் வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன. புதிய நடிகர்-நடிகைகளும் திரைக்கு அறிமுகமாகி கொண்டே இருக்கிறார்கள்.

உணவு பழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் நேர்மறை எண்ணங்கள்தான் என் இளமைக்கு காரணம்.

எடை குறைப்புக்காக மட்டும் உடற்பயிற்சி செய்யவில்லை. எதையும் நேர்மறை எண்ணத்துடன் செய்ய வேண்டும். அதுவே என்னை இளமையாக வைத்திருப்பதாக உணருகிறேன்.

மக்கள் மனதில் பதியும் கதாபாத்திரத்தில் நடிப்பதே முக்கியம். அப்படியான கதாபாத்திரங்களையே நான் எதிர்பார்க்கிறேன். வித்தியாசமான, முக்கியத்துவமிக்க கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.

‘நான் கடவுள் இல்லை’, ‘பஹிரா’ படங்கள் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. ‘டிரிங்… டிரிங்…’ எனும் கதாநாயகிக்கு முக்கியத்துவமிக்க ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். ‘கீ’ என்ற படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மக்கள் மனதில் பதியும் கதாபாத்திரங்களில் நடித்து, அவர்களது இதயங்களில் இடம்பிடிக்கவே நான் ஆசைப்படுகிறேன். எனது நடிப்புக்கு தேசிய அளவில் விருதுகள் வாங்கவேண்டும் என்பது என் வாழ்நாள் லட்சியமும் கூட. அதுமாதிரி கதாபாத்திரங்களை நான் தேர்வு செய்து நடிக்கிறேன்” என்றார்.