யானை தந்தங்களை பதுக்கியதாக மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மோகன்லால். இவர் தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார். மோகன்லாலுக்கு சொந்தமான வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 2012-ல் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் இரண்டு யானை தந்தங்கள் பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விலங்குகள் பாதுகாப்பு சட்டத்துக்கு விரோதமாக யானை தந்தங்களை பதுக்கியதாக மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது
இந்த நிலையில் யானை தந்தம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மோகன்லால் வருகிற நவம்பர் 3-ந்தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று பெரும்பாவூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். வழக்கை திரும்ப பெறக்கோரி மாநில அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார்.
மோகன்லால் கோர்ட்டில் ஆஜராகும்போது அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.