'மாவீரன்' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயன்..!

நடிகர் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.

சென்னை,

‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் ‘மாவீரன்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.

இதனை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘மாவீரன்’ படக்குழு தொடர்ந்து அப்டேட்டுகளை குவித்து வருவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.