'பெண்களை இப்படி பார்ப்பது மிகவும் வெட்கக்கேடானது' - மன்சூர் அலிகானை சாடிய மாளவிகா மோகனன்

திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகானை நடிகை மாளவிகா மோகனன் சாடியுள்ளார்.

சென்னை,

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.

நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். அவர் அந்த பதிவில், ‘மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன். அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன். மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர்’ என்று தெரிவித்திருந்தார்.

திரிஷாவுக்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், ‘மன்சூர் அலிகான் இவ்வாறு பேசியிருப்பது எனக்கு மிகவும் மன உளைச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நடத்தையை நான் முற்றிலுமாக கண்டிக்கிறேன்’ என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘இது ஒரு அருவருப்பான செயல். நடிகர் மன்சூர் அலிகான் பெண்களை பற்றி இப்படி சிந்திப்பது வெட்கக்கேடானது. பின்விளைவுகளை பற்றி கவலைப்படாமல், கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் அவர் பேசுவதை பார்க்கும்போது அவமானமாக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.