பணம் வாங்கியவர்கள் தராமல் ஏமாற்றினர்: கண் கலங்கிய டிஸ்கோ சாந்தி

டிஸ்கோ சாந்தி தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து ஐதராபாத்தில் குடியேறினார்

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்த டிஸ்கோ சாந்தி தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து ஐதராபாத்தில் குடியேறினார்.

பிரபுதேவா இயக்கத்தில் தயாரான ஒரு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க மும்பை சென்ற ஸ்ரீஹரி உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் தற்போது டிஸ்கோ சாந்தி அளித்துள்ள பேட்டியில், “எனது கணவர் உயிரோடு இருந்தபோது நிறைய பேருக்கு பணம் கொடுத்திருந்தார். அவர் இறந்த பிறகு நாங்கள் பணம் கொடுக்க வேண்டியவர்கள் மட்டுமே என் வீட்டிற்கு வந்தார்கள். எங்களுக்கு பணம் தர வேண்டியவர்கள் யாரும் வீட்டு பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை.

எங்களிடம் இருந்த நகை, கார், நிலம் எல்லாவற்றையும் விற்று கடனை அடைத்து விட்டோம். ஒரு காருக்கு தவணை கட்ட முடியாமல் வங்கி திருப்பி எடுத்துக் கொண்டது. இப்போது என்னிடம் அவர் கட்டிய தாலி மட்டுமே மிச்சம் இருக்கிறது. இரண்டு வீடுகள் உள்ளன அந்த வீட்டு வாடகையை வைத்து காலத்தை ஓட்டுகிறோம்.

சினிமா இண்டஸ்ட்ரியில் இருந்து யாரும் எங்களை உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்று கூட எட்டிப் பார்க்கவில்லை” என்று கண்கலங்கியபடி கூறினார்.