உருவ கேலியால் நடிகை வருத்தம்

தமிழில் அஜித்குமாருடன் அசல், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், விஷாலுடன் வெடி மற்றும் வேட்டை, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான சமீரா ரெட்டி தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன.

இந்த நிலையில் சமீரா ரெட்டி தற்போது அளித்துள்ள பேட்டியில், “சினிமாவில் நான் அதிக படங்களில் நடித்து பிரபலமாக இருந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு முன்பே நான் கர்ப்பமாக இருந்ததாக நிறைய வதந்திகள் பரவின. ஆனால் அதில் உண்மை இல்லை.

திருமணத்துக்கு பிறகுதான் எனது மகன் பிறந்தான். குழந்தை பிறந்த பிறகு ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையால் குண்டாகி விட்டேன். இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று உருவ கேலி செய்தார்கள். அவர்களுக்கு பயந்து நான் வெளியே செல்வதை கூட நிறுத்தி விட்டேன்” என்றார்.