இசை படைப்புகளுக்கு சேவை வரி: ஜி.வி.பிரகாஷ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

இசை படைப்புகளுக்கு சேவை வரி செலுத்த அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இசை படைப்புகளுக்கு சேவை வரி செலுத்த அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இசை படைப்புகளுக்கு ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த கூறி ஜி.எஸ்.டி ஆணையர், பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீசை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டை தனி நீதிபதி, ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ்குமார் மேல் முறையீடு செய்திருந்தார். அதில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும், தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் என கூறியிருந்தார். இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வு, நான்கு வாரங்களில் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.