என் பெயரில் வரும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் - இயக்குனர் மித்ரன் ஜவஹர் எச்சரிக்கை

என் பெயரில் வரும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்குனர் மித்ரன் ஜவஹர் எச்சரித்துள்ளார்.

சென்னை,

நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘யாரடி நீ மோகினி’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். பின்னர் மீண்டும் தனுஷ் நடிப்பில் குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதை, மதில் படங்களை இயக்கியிருந்தார்.

சமீபத்தில் வெளியான ‘திருசிற்றம்பலம்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “‘திருசிற்றம்பலம்’ படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறேன். வேறு எந்த படமும் பண்ணவில்லை. என் பெயரில் வெளியிலிருந்து வரும் பொய்யான செய்திகளையோ, விளம்பரங்களையோ யாரும் நம்ப வேண்டாம். விரைவில் அடுத்த படத்திற்கான செய்தியை என் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவேன்” என்று கூறியுள்ளார்.