இணையத்தில் செல்போன் எண்ணை கசிய விட்ட விஷமிகள்

தமிழில் பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்தவர் அடா சர்மா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்து சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி இந்தி படத்திலும் அடா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த படத்துக்கு எதிராக தியேட்டர்களில் போராட்டங்கள் நடந்தன. இதனால் மேற்கு வங்காளத்தில் படம் தடை செய்யப்பட்டது. தமிழக தியேட்டர்களில் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. படத்தில் நடித்துள்ள அடா சர்மாவுக்கு மிரட்டல்கள் வந்தன.

இந்த நிலையில் அடா சர்மா அளித்துள்ள பேட்டியில். “சில தினங்களுக்கு முன்பு எனது செல்போன் எண்ணை விஷமிகள் இணைய தளத்தில் கசிய விட்டனர். இதனால் பலர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசினர். ஒரு பெண்ணின் செல்போன் நம்பரும் மார்பிங் செய்த ஆபாச படங்களும் இணையத்தில் வெளியானால் மனம் என்ன பாடுபடும் என்பதை அனுபவம் மூலம் உணர்ந்தேன்.

தி கேரளா ஸ்டோரி படத்திலும் ஒரு பெண்ணின் போன் நம்பர் பகிரங்கமாக வெளியாகும்போது அந்த பெண் அடையும் வேதனைகளை காட்டி உள்ளனர். அதனை எனக்கு ஏற்பட்ட சம்பவம் நினைவுப்படுத்தியது. எனது செல்போன் நம்பரை வெளியிட்டவர் நிறைய குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்” என்றார்.