ஆஸ்கார் விருதால் உற்சாகம்... 'ஆர் ஆர் ஆர் படத்தின் 2-ம் பாகம் எடுப்பேன்' -டைரக்டர் ராஜமவுலி

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர் ஆர் ஆர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதையும் வென்று இருப்பது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து டைரக்டர் ராஜமவுலி அளித்துள்ள பேட்டியில், “ஆஸ்கார் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எங்களுக்குள் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்போம். அதற்கான பணிகளை வேகமாக தொடங்குவோம்” என்றார்.

‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றபோதே ஆர் ஆர் ஆர் படத்துக்கு இரண்டாம் பாகம் எடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து தற்போது அதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.