ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு...!

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

ஐதராபாத்,

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். நெல்சன் திலீப் குமார் டைரக்டு செய்கிறார். 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்கின்றனர். ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்துள்ளார்.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக மலையாள இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஓரிரு தினங்களில் படமாக்கப்பட உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, ஜெயிலர் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஐதரபாத் சென்றுள்ளார். அங்கு படப்படிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் இன்று ஐதராபாத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.