விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் நாளை காலை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
சென்னை,
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் மீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, மீராவின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பிரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நடிகர்கள், திரயுலகினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் சிம்பு, பரத், கார்த்தி, நிழல்கள் ரவி, சதிஷ், பார்த்திபன், சத்யராஜ், லிவிங்ஸ்டன், மிஸ்கின் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மீராவின் உடல் நாளை காலை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் மீரா எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதில் “Love you all… Miss you all என தொடங்கி 10 வரிகளில் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனது நண்பர்களையும், ஆசிரியர்களையும் நான் மிஸ் செய்வேன். நான் இல்லாமல் எனது குடும்பம் தவிக்கும். நானும் எனது குடும்பம் இல்லாமல் தவித்து போவேன்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.