இறைவன்: சினிமா விமர்சனம்
நடிகர்: சாய் கார்த்திக், விஜே பப்பு  டைரக்ஷன்: தினேஷ் குமரன் இசை: பத்மயன் சிவானந்தன் ஒளிப்பதிவு : சிவராஜ்

சிலை கடத்தலில் கை தேர்ந்தவர் சாய் கார்த்திக். விலை உயர்ந்த சோழர் காலத்து சிலை கடத்தும் பொறுப்பு அவரிடத்தில் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் கடத்தும் போது சிலை காணாமல் போகிறது.

தன்னுடன் வேலை பார்க்கும் ஜெய்யிடம் காதலை சொல்ல முயற்சிக்கிறார் விஜே பப்பு

காவல் அதிகாரியான கஜராஜ் வேலைக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

சில்லரை திருட்டு செய்து பிழைப்பு நடத்துகிறார்கள் அஸ்ரப், தினேஷ் குமரன்.

இவர்கள் அனைவரும் ஒரு புள்ளியில் எப்படி சேர்கிறார்கள். அவரவர் பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பது மீதி கதை.

சிலை கடத்தல்காரராக வரும் சாய் கார்த்தி யதார்த்தமாக நடித்து கவனம் பெறுகிறார். நிஜ ரவுடிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதைப் போல அவருடைய தோற்றமும் நடைஉடையும் இருப்பது வியப்பை அளிக்கிறது. அறிமுகப் படத்திலேயே முதிர்ச்சியான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

காதலர்களாக வரும் கவுதம், ஜே இருவரும் தங்கள் வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

காவல் அதிகாரியாக வரும் கஜராஜ் தன் வேடத்தை ரசித்துப்பண்ணி இருக்கிறார். போலீஸ் அதிகாரிகளின் அகராதியை படித்ததுபோல் மிக இயல்பாக அவருடைய உடல்மொழி பேசியவிதம் சிறப்பு.

இளைஞர்கள் அஸ்ரப், தினேஷ் குமரன் இருவரும் கதையை கலகலப்பாக நகர்த்துவதற்கு மிகவும் உதவி இருக்கிறார்கள். இயல்பான அவர்களுடைய நகைச்சுவை படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

பெரும்பாலான கதை இரவு நேரத்தில் நடைபெறுகிறது. அதை சலிப்புத் தட்டாத அளவுக்கு மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சிவராஜ்.

நிழல் உலக கதைக்கான பின்னணி இசையை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். பத்மயன் சிவானந்தன்.

சில லாஜிக் குறைகள் இருந்தாலும் ஓரிரு தெரிந்து முகங்களை வைத்து ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக கதை சொல்லி தேர்ந்த இயக்குனராக பளிச்சிடுகிறார் தினேஷ் குமரன்.